Monday 19 January 2015

பொற்காலம் தந்த பொன்மனச் செம்மல்



கண்டியில் பிறந்த காலச்சக்கரமே
காவலானாய் வந்த ஏழைப் பங்காளரே

நடிப்பெனும் மேடையில்
நிதர்சனமாய் வாழ்ந்த மனிதமே

சத்ய பாமா மகனே
சாரங்கபாணி தமையனே
சதிலீலாவதி முதல் நாயகனே

அகவை 95 கடந்த போதும்...
70 ல் மண்ணுடல் நீர்த்த போதும்
இன்றும் அவணி வாழும் அற்புத சரித்திரமே

வள்ளல் உன் குணமே கருணை உன் முகமே

அரிதாரமிட்டு அடையாளமாகி
அகம் நுழைந்து ஜெகம் ஆண்டாய்

இரட்டை இலை பிதாமகனே

இறந்தும் இறவா வள்லலாய் வாழும் சீதக்காதியே

உன் பெயர் சொல்லியே இன்னும் ஜீவிதம் நடத்துகிறார்கள்
உந்தருமை உயிர் நேசிப்பு தொண்டர்கள்

நிழலென வந்து நிஜமான பேரெழிலே
பெருந்தன்மையின் சிகரமே
சுட்டபோதும் .....எதிரியை சுடாத நெருப்பே

அண்ணாவின் அருமைத்தம்பியே
அவரின் இடபாகமாய் கடற்கறை கோயில் உறையும்
மக்களின் இதய தெய்வமே

திலகமிட்ட மங்கையர் முதல்
திமிரும் காளைகள் வரை நரை மீசை முறுக்கி
ரசிக்கும் மன்மத மக்கள் திலகமே

வந்துவிடாத நடனத்தையும்...வாசல்வரை வந்து
கதவடைக்கும் அழுகையையும்....அசாத்தியாமாய் புறந்தள்ளி
அழகிய ஸ்டெயிலாய்....இருவிரல் கொண்டு புது செயல் தொடுத்த இதயக்கனியே

நீர் சிரித்தால் சிரிக்க வைத்து ..அழுதால் ஆவேசப்படவைத்து
ஆவேசப்பட்டால் சிலிர்த்தெழ வைத்து.....
திறமை மீறி ..திரை தாண்டி
திவ்யமாய் வாழ்ந்த பாரத் ரத்னா பெருமகனே

ஏழைப்பங்களானாய் நீர் ஆவியணைத்து உடன்இருக்கிறாய் என்றே
உன்னை உள்ளக் கண்களில் நிறைத்து
இன்னும் நிம்மதியுறங்குகிறது....
எழுந்து நடமாட முடியாமல் கிடையாய் கிடக்கும் கிழவிகள்

பொன்மனச்செம்மாலாய்
பொன்னின் நிறம் கொண்டு
பொன் கழஞ்சு மனமாய்
பொன் செப்பு பாசம் தாங்கி
பொன்மொழிப் பாடல்களின் வழி
பொன் கொற்ற கொடை கீழ்
பொற்கால வாழ்வு தந்த மன்னாதி மன்னரே

பெருந்தன்மை பேரன்புடன்
எங்கள் இமையணைத்த கடையேழு வள்ளலின்
துணைசேரும் மதுரை மீட்ட சுந்தரபாண்டியரே

நினைக்க நினைக்க மகிழ்வு தென்றலாய் அணைத்து
எழுச்சிதரும் புரட்சித்தலைவரே

நன்றியெனும் ..உதவியெனும்..செயலுக்கு
மூச்சு முகவரியான மூன்றெழுத்தே

கோடான கோடி தாய் தந்தைமார்கள்
கருவேந்திய வெற்றிக்கனியே

சகாப்த வாழ்வு கண்ட சரித்திர கலங்கரையே

மண்னில் மானுடம் நன்றி எனும் உணர்வோடு
வாழும் காலம் வரை நீயும்
வாழ்ந்திருப்பாய் வள்லல் திருமகனே...

பெருமை திமிருடன் ..என் மொழி சமர்பிக்கிறேன்
பேரழகு பெருந்தன்மை செம்மலுக்கு

என்றும் வாழும் புதிய பூமியாய்
பிறர் வாழ் வாழும் தெய்வமனிதர் நீர்


1 comment:

  1. வாழ்த்துகள் அக்கா, உங்களோட இந்த போஸ்ட் வலைச்சரத்துல அறிமுகப்படுத்தப் பட்டுருக்கு...

    http://blogintamil.blogspot.in/2015/03/blog-post_10.html

    ReplyDelete

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..